பேய்கள் பலம் பெறும் அபாயம்! தமிழர்கள் வெளிநாட்டுக்கு தப்பியோட வேண்டுமா? மைத்திரி ஆதங்கம்


யாழ்ப்பாணத்தில் தனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

எனக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டினார்கள். ஆக்ரோஷமாக வாதிட்டார்கள், கோஷமிட்டார்கள் எனினும் நான் அச்சம் கொள்ளவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நேராக சென்று அவர்களின் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிய முற்பட்டேன். ஆனால் அவர்கள் பிரச்சினை குறித்துப் பேசவிரும்பவில்லை.

உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் என்றார்கள். அது எப்படி சாத்தியமாகும்? எந்தப் பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியுமே தவிர, வன்முறையாலோ, முரண்பாடுகளை ஏற்படுத்துவதனாலோ முடியாது.

ஏற்கனவே வன்முறையால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இந்த நாடு முகங்கொடுத்துள்ளது. வசதியுள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு ஓடித் தப்பிச் சென்றுவிடுவார்கள். ஆனால் வறியவர்கள்தான் சிக்கிக்கொள்வார்கள்.

வன்முறையை பயன்படுத்தினால் நிச்சயமாக அரசாங்கமோ, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களோ எந்தவித லாபமும் அடையப் போவதில்லை. ஆனால் அதை வைத்து வேறு சிலர் இலாபம் அடைவது உறுதி.

என் மீது நம்பிக்கை வைத்துத்தான் நீங்கள் அனைவரும் வாக்களித்து என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் விதத்தில் தீர்வு ஏற்படுத்தித் தரவே நான் முயற்சிக்கிறேன்.

இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் மூலம் என்னை, எனது முயற்சிகளை பலவீனப்படுத்தினால் மீண்டும் பேய்கள் தான் பலம் பெறும். அது இந்த நாட்டுக்கே பெரும் ஆபத்தாக அமைந்துவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Comments