இரண்டு தேரர்களுக்கு சி.சி.டி. இன்று அழைப்பு
சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர், அரம்பேபொல ரதனசார தேரர் ஆகியோரை இன்று கொழும்பு தெமட்டகொடையில் உள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் (சி.சி.டி.) ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று காலை அவர்களை இவ்வாறு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், கல்கிசையில் கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி ரோஹிங்ய முஸ்லிம்கள் மீதான அத்துமீறல் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.
கல்கிசைப் பொலிஸ் பிரிவில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகத்தின் பாதுகாப்பின் கீழ், மூன்று மாடி வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றி நாடு கடத்துமாறு பிக்குகள் தலைமையிலான குழுவினர் செய்த அத்துமீறல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த டி சொய்ஸாவின் நேரடி கட்டுப்பாட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரதிலக, பிரதான பொலிஸ் பரிசோதகரும் அந்த பிரிவின் பொறுப்பதிகாரியுமான நெவில் டி சில்வாவின் கீழ் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவர்களின் அறிவுறுத்தல் பிரகாரமே விசாரணை அவசியம் கருதி இன்று ஆஜராகுமாறு இந்த அழைப்பு இரு தேரர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment