மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய கோரிக்கை
எப்.முபாரக்
திருகோணமலை-மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச்செய்யுமாறு கோரி இன்று (04) கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹூதா ஜும்ஆப்பள்ளி வாசலினால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மொறவெவ பிரதேசத்தில் ஆரம்ப காலத்தில் வைத்தியசாலைகள் மூடப்பட்டிருந்த போதிலும் எந்தவொரு வைத்தியர்களும் கடமைக்கு வருவதற்கு விருப்பமில்லாமல் இருந்த நிலையில் மஹதிவுல்வெவ மத்திய மருந்தகமாக காணப்பட்ட இவ்வவைத்தியசாலைக்கு தற்போது கடமையிலுள்ள வைத்திய பொறுப்பதிகாரி டொக்டர் ரஞ்சித் விதானகே
வருகை தந்து விடுமுறை தினங்களை கவனிக்காத நிலையில் தமது கடமையினை அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்ததாகவும் அவர் 24 மணி நேரமும் எவ்வித இலாபத்தையும் எதிர்பார்க்காமல் சமூக நோக்குடன் செயற்பட்டு வந்தவர் எனவும் அவரின் இடமாற்றம் கேள்வியுற்றதையடுத்து நோயாளர்கள் கவலையடைவதாகவும் ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜூம்ஆ பள்ளி வாசலினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களத்திற்குற்பட்ட மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் தற்போது வைத்தியராக கடமையாற்றும் டொக்டர் ரஞ்சித் விதானகே என்பவரை நோயாளர்களின் நலன்கருதியும் அதிக மக்களின் விருப்பத்தினாலும் அவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்துச்செய்ய வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Comments
Post a Comment