மூதூரில் பணமும் நகையும் திருட்டு.

எப்.முபாரக் 
      
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் அல்லைநகர் பகுதியில்  கைம்பெண் ஒருவர் வசித்து வந்த வீடொன்றில் நேற்றிரவு(9)  உட்புகுந்த இனந்தெரியா நபர் 60 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மூன்று  பவுண் தங்கச் சங்கிலியையும் திருடிச் சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளரால் மூதூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

குறித்த வீட்டுக்கார பெண் வெள்ளிக்கிழமை வங்கியில் எடுத்து வந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பையில் வைத்து அதனை சுவர் ஒன்றில் கொழுவி வைத்துள்ளார்.அதன் பிறகு இரவு தூங்கும் நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த 03 பவுண் சங்கலியை கழட்டி பணம் வைத்திருந்த பையில் வைத்து தூங்கியுள்ளார்.

இந்த நேரத்தில் வீட்டில் அனைவரும் தூங்கிய பின் வீட்டின் ஜன்னலை உடைத்து சூட்சுமமான முறையில் வீட்டினுல் நுழைந்த திருடன் சுவரில் கொழுவி வைத்திருந்த பணப்பையினை திருடிச்சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.

வீட்டுக்காரப் பெண் காலையில் எழும்பி பார்த்த போது  வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது அவதானித்து விட்டு பணப்பையினை பார்த்த போதே பணமும் நகையும் திருடப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.    

Comments