திருகோணமலையில் போலி மருந்தக முகாமையாளருக்கு அபராதமும், பகிரங்க மன்னிப்பு கோருமாறும் நீதிவான் உத்தரவிட்டார்

2017-12-12.                 போலி மருந்தக முகாமையாளருக்கு அபராதம் செலுத்துமாறும் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோருமாறும் திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று (12) உத்தரவிட்டார்.

திருகோணமலை வடகரை வீதி, பரஞ்சோதி மெடிக்கல் முகாமையாரான ஜே.அன்டன் கௌரிதாஷன் என்பவருக்கே மேற்படி உத்தரவு வழங்கப்பட்டது.

திருகோணமலை பிராந்திய உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களான ஆர்.முகுந்தன்  டி.சிவகுமார்  ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் குறித்த முகாமையாளர் கைதுசெய்யப்பட்டார்.

வழக்கு விசாரணை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் உரிமம் இல்லாமல் மருந்தகத்தை நடத்திய குற்றச்சாட்டுக்கு 50,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் அதைக் கட்டத் தவறும் பட்சத்தில் 6 மாதங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து  வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் காலாவதியான ஆங்கில மருந்து வகைகளை விற்பனைக்காகவும் வெளிக்காட்டி வைத்திருந்தமை மற்றும் களஞ்சியப்படுத்தியிருந்தமைக்காகவும்  50,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் அதைக் கட்டத் தவறும் பட்சத்தில் 6 மாதங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து  வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இவை தவிர  மேலதிகமாக தினசரி பத்திரிகையொன்றின் முதற்பக்கச் செய்தியாக பொதுமக்களிடம் பொது மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் அதனையடுத்து பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை பிரதியை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறும் திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

Comments