நாட்டின் சட்டங்களை மீறாது உழ்ஹியாவை நிறைவேற்றுக
முஸ்லிம்கள் தங்களது உழ்ஹியா கடமையை நாட்டின் சட்ட திட்டங்களை மீறாத வகையில் ஏனைய சமூகத்தினரின் உணர்வுகளைத் தூண்டாத வகையில் நிறைவேற்ற வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சில தீய சக்திகள் இனவாத அமைப்புகள் உழ்ஹியாவுக்காக பிராணிகள் அறுப்பதில் மற்றும் போக்குவரத்து செய்வதில் சட்டமீறல்கள் ஏற்பட்டால் அதனைக் காரணமாகக் கொண்டு பிரச்சினைகளை உருவாக்கலாம். என்பதால் சட்ட விதிகளை கவனமாகப் பின்பற்ற வேண்டுமெனவும் அறிவித்துள்ளது.
உழ்ஹியா கடமை தொடர்பில் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
முஸ்லிம்கள் உழ்ஹியா கடமைக்காக கொண்டுவரும் மிருகங்களை மிகவும் காருண்யமாக நடத்துவதுடன் போதியளவு அவற்றுக்கான உணவுகளைத் தடையின்றி ஏற்பாடு செய்யவேண்டும். தமது வீடுகளில் ஆடு மற்றும் மாடுகளை அறுக்காது அதற்கென அனுமதிக்கப்பட்டுள்ள மடுவங்களிலே அறுக்க வேண்டும். பள்ளிவாசல்களில் கூட்டுக் குர்பான் (உழ்ஹியா) கொடுப்பதாயின் அதற்கான அனுமதியை ஏற்கனவே பெற்றிருக்க வேண்டும்.
அறுக்கப்படும் பிராணியின் எலும்புகள், தோல் மற்றும் எச்சங்களை வெறுமனே வீசியெறியாது அவை நிலத்தினுள் புதைக்கப்பட வேண்டும். மிருகங்களை அறுப்பதற்கான அனுமதிப் பத்திரம் பிரதேச செயலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
உழ்ஹியா கொடுப்பவர்கள் தமது கடமையை மதித்து இஸ்லாம் விதித்துள்ள முறைகளைப் பேணி மிருகங்களுக்கு வேதனை ஏற்படாத வகையில் கடமையை நிறைவேற்ற வேண்டும். கடந்த காலங்களில் சில இடங்களில் உழ்ஹியா கடமையில் அரசாங்கத்தின் சட்டத்திட்டங்கள் மீறப்பட்டமையினால் பல பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது.
தேவையான அனுமதிப் பத்திரமின்றி மாடுகள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு போக்குவரத்து செய்யப்பட்டால் பொலிஸாரினால் மாடுகள் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்படலாம் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment