தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய நல்ல கனவுகளை கண் முன்னே கொண்டுவரும்போது இந்த நாட்டின் அப்பாவி மக்கள் உண்மையாகவே மகிழ்ச்சியடைவர் – ஜனாதிபதி


கிராமத்திலுள்ள பாடசாலை, வைத்தியசாலை மற்றும் சமய ஸ்தாபனங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு, மக்கள் வாழ்க்கையில் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டு தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த நல்ல கனவுகள் கண்முன்னே தெரியும்போது இந்த நாட்டின் அப்பாவி மக்கள் உண்மையாகவே மகிழ்வடைகின்றனர் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.


லிப்டன் சுற்றுவட்டாரத்திலிருந்து உங்களுக்கு இப்போது மகிழ்ச்சியா? என்று கேட்கின்ற அரசியல்வாதிகள் கிராமத்திலுள்ள அப்பாவி மக்களிடம் சென்று இந்த மகிழ்ச்சியை கண்டுகொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.ஹிங்குரக்தமன காஷ்யப்ப பிரிவெனாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிக்குகளுக்கான விடுதியை மகா சங்கத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வில்  (03) பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.


“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 14 மில்லியன் ரூபா செலவில் இந்த அபிவிருத்தி பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தற்போதைய அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் நாட்டிலுள்ள அப்பாவி கிராமிய மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கே முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.நகரத்திலுள்ள அபிவிருத்தியை கிராமத்திற்கும் கொண்டுபோய் கிராமத்தில் இடம்பெற்றுள்ள அபிவிருத்தி தொடர்பான அநீதிகளை இல்லாமல் செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் விரிவான நிகழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.


அப்பாவி விவசாய சமூகத்தின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் வாழ்க்கையையும் நாட்டின் விவசாயத் துறையையும் அதேபோன்று தேசிய பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்கு விவசாயத் துறையில் விரிவான மாற்றமொன்றை தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இந்த நிகழ்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு கல்விமான்களின் ஒத்துழைப்பு அவசியம் எனக் குறிப்பிட்டார்.


நேற்று ஹிங்குரக்தமன காஷ்யப்ப பிரிவெனா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், முதலில் சமய கிரியைகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.விகாராதிபதி சங்கைக்குரிய மெதிரிகிரியே வினீத நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், அவரது சுக துக்கங்களை கேட்டறிந்தார்.


அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய நுவரெலியே சந்திரஜோதி தேரர் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். அவர் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னமொன்றையும் வழங்கிவைத்தார். பிரிவெனாவில் கல்வி கற்கும் பிக்கு மாணவர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.


புதிய பிக்கு விடுதிக்கு காலஞ்சென்ற சங்கைக்குரிய வடகொட பிரேமானந்த நாயக்க தேரரின் பெயரை வைப்பதற்கு ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதி அவர்களால் நிறைவேற்றப்பட்டது.பொலன்னறுவை இசிபதனாராமாதிபதி சங்கைக்குரிய உடகம தம்மானந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், சாந்த பண்டார, வடமத்திய மாகாண ஆளுநர் எம்.பீ. ஜயசிங்ஹ, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Comments