திடீரென காணாமல் போன இளம் யுவதிகள்! கண்டால் தகவல் அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை
க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவிகள் உட்பட மூவர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 5 ஆம் திகதியிலிருந்து குறித்த மூவரும் காணாமற்போனதாக முறைப்பாடு செய்யப்பட்டமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பலேல்பொல மஹாபோதி வித்தியாலயத்தில் தரம் -13 இல் கல்வி கற்கும் சன்ஜீவனி குமாரி எதிரிசிங்க, கலேவெல மத்திய மகா வித்தியாலயத்தில் உயர் தரத்தில் பயிலும் தில்மி மதுவந்தி பெரேரா மற்றும் அலங்கர விற்பனை நிலையத்தில் வேலை செய்யும் 22 வயதுடைய ஜீ.எம். நிஷன்சலா ஆகிய மூன்று யுவதிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தில் கலேவெல நகரத்தில் வேலை செய்யும் குறித்த யுவதியே இரண்டு மாணவிகளையும் ஏமாற்றி அழைத்துச் சென்றிருக்க வேண்டுமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கலேவெல மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி கொழும்புக்குச் செல்வாக எழுதிய கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த இளம் பெண்களை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
இவர்களின் விவரங்கள் தெரிந்திருந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு கோரியுள்ளனர்.


Comments
Post a Comment